தமிழகமும் வறட்சியும்
- சிம்சன்
வறட்சிக்கான முக்கிய காரணங்கள் நான்கு. 1 வான்நிலை வறட்சி (Meteorological drought) 2. விவசாயத்தில் வறட்சி (Agricultural drought ) 3. நீரின் வறட்சி (Hydrological drought) 4. சமூக – பொருளாதார வறட்சி (Socio - Economic drought). இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடைய, இயங்காற்றல் கொண்டவை.
வான்நிலை வறட்சி(Meteorological drought )
தமிழகத்தை பொறுத்தவரை சராசரி மழைப் பொழிவு மிகக் குறைவாகவே இருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் 8 மாவட்டங்கள் வறட்சிக்கானவையாகக் கணக்கிடப்பட்டன. இவ்வாண்டும் அதேபோல கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், சேலம், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒழுங்கற்ற மற்றும் கணிக்கமுடியாத மழைப் பொழிவு இருந்ததை பார்க்கிறோம். மழை பொய்த்துப் போவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று பூமி வெப்பமயமாதலாகும். ஆண்டுதோறும் மழை பொய்த்துப் போவதை வறட்சிக் குறியீடாக அரசு கணக்கீடு செய்கிறது.
விவசாயத்தில் வறட்சி(Agricultural drought)
தமிழக நிலத்தின் தன்மை இடத்திற்கேற்றவாறு மாறுபட்டதாகும். டெல்டா பகுதிகள் களிமண் அதிக அளவில் கலந்த நிலப்பரப்பு. இதற்கு நீரை உறிஞ்சுகிற தன்மை இல்லை. மழைக்காலங்களில் தேங்கும் நீரில் நெல் மட்டுமே பயிரிடக்கூடிய நிலப்பகுதி. கோடை காலத்தில் டெல்டா நிலங்களில் வெடிப்புகள்தான் உருவாகும். இவ்வெடிப்புகளை மாற்ற வேண்டுமானால் அதிக நீர் தேவை. மூன்று போக நெல் விளைவித்த இப்பகுதியில் தற்போது ஒரு போகத்திற்கே நீர் பற்றாக்குறை உள்ளது.
தென் தமிழகம் வறண்ட கரிசல் நிலம். இங்கு பருத்தி, மிளகாய், பருப்பு வகைகள் பயிரிடப்பட ஏதுவான நிலத் தன்மை கொண்டது. இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அதிக வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 140 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ள அபாயம் இந்த ஆண்டு ஏற்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் 2015 மற்றும் 2024 ல் வெள்ளப்பாதிப்பு அதிகமானதாக இருந்தது.
நீரின் வறட்சி(Hydrological drought )
நீரின் தேவையும் அதன் பயன்பாடும் மிக முக்கியமான ஒன்று. தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னரே தண்ணீர்ப் பற்றாக்குறையால் பல மாவட்டங்களில் மக்கள் போராட்டத்தை துவக்கினர். தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களில் மக்கள் குடிநீருக்கே பல மைல்கள் நடந்து சென்று நீர் சேகரிக்க வேண்டிய நிலைமை இருந்தது.
இந்நிலைமையைப் புரிந்து கொள்ள நாம் மூன்று முக்கிய கட்டங்களை கவனித்தாக வேண்டும். முதலாவது உயிரினம் வாழ உயிர்க்கோளம் ( Biosphere) மிகவும் பொருத்தப்பாடுடையதாக இருக்க வேண்டும். அதாவது உயிர்வாழத் தகுதியான நிலப்பகுதி மற்றும் தட்ப வெட்ப நிலை சீரானதாக அமைந்திருக்க வேண்டும். அடுத்ததாக நீர் வளம் (Hydro sphere) தேவையான அளவு மாசற்றதாக இருக்க வேண்டும். வளி மண்டலம் (Atmosphere) சுத்தமானதாக இருக்க வேண்டும். மேற்கூறிய மூன்று நிலைமைகளின் மீது செயலற்று இருப்பதோ அல்லது அவற்றைப் புறந்தள்ளி விடுவதோ மிகவும் ஆபத்தானதாகும்.
நீர் மேலாண்மையைக் கண்காணித்து தேவைக் கேற்றளவில் பகிர்வது என்பது இல்லை. நீர் நிலைகளைப் பாதுகாக்க காடுகளும், கடலும் அடிப்படையிலே மிக முக்கியமான ஒன்று. கடலும் காடுகளும் காலத்தின் தட்ப வெட்ப நிலையை சீராக்கும் முக்கிய சீராக்கிகளாக (Regulator) செயல்படுகின்றன. நீர் நிலைகளின் மேலாண்மை என்பது குளங்கள், கண்மாய், ஏரிகள் ஆகியவற்றை தூர் வாரி பராமரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 61 பெரிய நீர்த்தேக்கங்களும் சுமார் 39,200 சிறிய நீர் நிலைக் கண்மாய்களும் இருக்கின்றன. ஆனால், அவை பெரும்பாலும் வறண்டு கிடக்கின்றன. காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன. மழைக்காலங்களில் மட்டுமே ஆற்று நீர் ஓடி கடலில் கலக்கிறது. ஆறுகள் வறண்டு போனதற்கான காரணம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதுதான் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மழை நீர்த் தேக்கத்திற்கான கொள்கை இருப்பதாக சொல்லப்பட்டாலும் அவை நடைமுறையில் அமுலாக்கப்படவில்லை. சென்ற 2015 ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 380 டி.எம்.சி தண்ணீர் வீணாய் கடலில் கலந்தது. சென்னையில் தற்போது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 35,000 பேர் வசிக்கின்றனர். மக்கள் அடர்த்தி அதிகரிக்கும் போது நீர்த்தேவையும் அதிகரிக்கிறது, சுற்றுப்புறச் சூழலும் மாசு படிதலும் அதிகரிக்கிறது. நகர்ப்புறமயமாதலின் வேகத்தினால் நகரங்களின் தேவைகள் அதிகரிக்கின்றன.
சமூக – பொருளாதார வறட்சி (Socio - Economic drought )
தமிழகம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிய மாநிலமாக சொல்லப்படுகிறது. நீரின் தேவையும் அதன் இருப்பும் தமிழக வளர்ச்சியின் முக்கிய காரணிகள். தொழில் மற்றும் விவசாய வளர்ச்சியின் நிலைமைகளுக்கேற்ப நீரின் இருப்பு பராமரிக்கப்படுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஆற்று ஓரங்களில் தொழிற்சாலைகள் ஆற்று நீரை கணிசமாக பயன்படுத்துகின்றன, மாசுபடுத்துகின்றன. தொழிற்சாலை கழிவுகள் அனைத்தும் ஆற்று நீரில் கலக்கப்படுகிறது. இதனால் கடல் நீரும் அசுத்தமாக்கப்படுகிறது. பாலாறுதான் உலகின் மாசுபடிந்த ஆறுகளில் நான்காவதாக இருக்கிறது என ஆய்வு சொல்கிறது. ஏனெனில் இவ்வாற்றின் அருகில்தான் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. இவற்றின் கழிவுகள் நீரை மிக மோசமாக அசுத்தப்படுத்துவதோடு கடல் நீரையும் மாசு படியச் செய்கிறது. ஆற்றங்கரைகளில் மணல் குவாரி அமைக்க தனியாரை அனுமதிக்கிறது அரசு. பெரும் மணல் கொள்ளை நடைபெறுகிறது. சமீபத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மணல் அள்ள தனியாருக்கு உரிமம் வழங்கக் கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளது (திருவாடானை வட்டம், சிறுகம்பையூர் ஆற்றுமணல் கொள்ளை வழக்கு).
கட்டுப்படுத்த முடியாத இடம் பெயர்தல், விவசாயத்திற்கான நீர் பற்றாக்குறையால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுதல், தற்கொலை செய்துகொள்ளுதல், டெல்டா பகுதிகளில் விவசாயத்தை அழிக்கின்ற எரிவாயுக் குழாய்கள் பதிப்பு மற்றும் மீத்தேன் கிணறுகள் தோண்டுதல், நாகப்பட்டினத்தில் உள்ள கடலோர கிராமங்களில் பலநூறு ஏக்கர் நிலங்கள் கடல் அரிப்பு இவையும் இன்னபிறவும் தமிழக வறட்சியின் அறிகுறிகளாக இருக்கின்றன.
நீர் நிலைகளைப் பராமரித்தல், காற்று மற்றும் கடல் மாசு படுதலை தடுத்தல், காடுகளை வளர்த்தெடுத்தல் ஆகியன குறித்த சூழலியல் அறிவியல் கண்ணோட்டமின்றி கார்ப்பரேட் கொள்ளைக்குத் துணை போகிறார்கள் ஆட்சியாளர்கள். வளர்ச்சிதம்பட்டத்தின் பின்னால் சுற்றுச் சூழல் கேடு, நீராதாரம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது, லாபவெறி பிடித்த கார்ப்பரேட் கொள்ளை ஆகியன ஆட்சியாளர்களால் மறைக்கப்படுகின்றன. வறட்சி, சூழலியல் கேடு, வெப்பமயமாதல் ஆகியன இயற்கை அல்ல. இவற்றுக்கு முதன்மை காரணம் கார்ப்பரேட் லாப வேட்டை, அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள்தான்.
அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
- பெரு நீர்த்தேக்கங்கள், கண்மாய்கள், குளங்கள் தூர் வாரப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
- ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளைக் கண்டறிந்து ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
- உயிரினங்களுக்கு ஊறு செய்யும் மரங்களைப் பயிரிடுவது தடுக்கப்பட வேண்டும்.
- விவசாயத்தைப் பாழடிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட வேண்டும்
- அனைத்து குக்கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்
- மேற்கு தொடர்ச்சி மலையில் மரங்கள் வெட்டப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
- மழை நீர் பாதுகாக்க அறிவியல் ரீதியான தொழில்நுட்பத்துடன் கூடிய செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
- காடுகள், கடல் மற்றும் ஆறுகளில் மக்காத குப்பைகள் (பிளாஸ்டிக்), தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், சாயப்பட்டறை கழிவு நீர் ஆகியன கலப்பதைத் தடுக்க வேண்டும்.
- மணல்குவாரிகளை உடன் அரசு நிறுத்த வேண்டும். தற்போது கையிருப்பாய் இருக்கிற மணல் மற்றும் தாதுப்பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- நகரமயமாதல் மூலம் நகரங்களில் பெருகும் மக்கள் அடர்த்தியைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்
- விவசாயத்திற்கான நீர் தேவையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- நாகப்பட்டின கடலோரக் கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் மீதான கடல் அரிப்பைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.
- நிலம், நீர், காற்று அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைந்த இயக்கமாய் இருப்பதால் சுத்தமான குடிநீர், சுத்தமான காற்று, சுகாதாரமான உணவு, ஆரோக்கியமான சுகாதாரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலை நிறுவனங்கள் தண்டிக்கப்படவேண்டும்.
- தமிழ்நாட்டின் பசுமைப்பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு தீவிரமுயற்சி மேற்கொள்ள வேண்டும்.
